புதன், 5 மார்ச், 2014

விஜய் டிவியின் மகாபாரதமும் எங்கள் வீட்டு மகாராணிகளும்






கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சவுடனே, ஓவியா தினமும் இரவு கதை கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஏழெட்டு நீதிக் கதைகளையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பேன். திருப்பி திருப்பி கேட்ட கதைகளையே கேட்டு கேட்டு அவுங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, அதனால புது கதை சொல்லுங்க, புது கதை சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு. நானும் இந்தியாவிற்கு போயிட்டு வரும்போது, கொஞ்சம் நீதிக் கதைகள் புக் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்து அதிலேருந்து படிச்சு சொல்லுவேன். இதுல ஒரு நாள் வீட்டு அம்மணி, தன்னோட கற்பனை வளத்தை உபயோகப்படுத்தி, ஒரு கதை சொல்லியிருக்காங்க. அது ஓவியாவிற்கும் சரி, இனியாவிற்கும் சரி ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதற்கு பிறகு அவுங்க ரெண்டு பேரும் என்கிட்ட நீங்க புக் படிச்சு கதை சொல்லாதீங்க, அம்மா சொன்ன மாதிரி, நீங்களே யோசிச்சு சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் உங்கம்மா மாதிரி எனக்கு யோசிக்க தெரியாது, அதனால அவுங்கக்கிட்டேயே கேட்டுக்குங்கன்னு சொல்லி சமாளிச்சேன். ஆனா ஓவியா, “நான் அம்மாக்கிட்டே கேட்டேன், அதுக்கு அவுங்களுக்கு அந்த ஒரு கதை தான் தெரியுமாம், அப்பாவுக்கு தான் இந்த மாதிரி சொந்தமா நிறைய கதையெல்லாம் தெரியும், நீ அப்பாக்கிட்டேயே கேளுன்னு சொல்லிட்டாங்கப்பான்னு” திருப்பி என்கிட்டேயே வந்து நின்னாங்க. அட கடவுளே! ஒரு நாள் என்னால கதை சொல்ல முடியாம அம்மணியை கதை சொல்ல சொன்னதுக்கு, என்னைய நல்லா பழி வாங்கிட்டாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். வீட்டுல தூங்கப்போறதுக்கு முன்னாடி நீதிக்கதைகளை படிச்சவன், மறு நாளையிலிருந்து, அந்த கதை புத்தகத்தை trainல படிச்சுக்கிட்டு, இரவு அவுங்களுக்கு நானா யோசிச்சு சொல்றாமதிரி பில்டப் பண்னினேன். தினமும் இவுங்களுக்காக கதையை தேடித்தேடி படிக்கிறதுனால, என்னோட மத்த கதை புத்தகங்களை படிக்க முடியாம போயிக்கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல தான் ஆபத்வாந்தனாக, விஜய் டிவியில மாகாபாரதம் வர ஆரம்பிச்சுது (ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டேனா!!!).


தினமும் நாம இரவு மகாபாரதம் பார்ப்போம், நீங்க படுக்கப்போகும்போது, நான் உங்களுக்கு புரியிர மாதிரி அன்னைக்கு டிவியில வந்த மகாபாரதக்கதையை சொல்றேன்னு ரெண்டு மகாரணிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டேன். எங்க வீட்டுல நாங்க “YUPPTV”யை கனெக்ஷன் கொடுத்திருக்கோம். அதுவும் எனக்கு இதெல்லாம் தெரியாது. ஒரு நண்பர் தன்னோட வீட்டுல விஜய் டி‌வி நிகழ்ச்சி எல்லாம் இணையம் மூலமா டிவியில பார்க்கிறோம்னு சொன்னாரு. உடனே, எங்க வீட்டு அம்மணிக்கு ஆசை வந்துடுச்சு. நம்ம வீட்டிலும் அந்த கனெக்ஷன் கொடுத்தா நானும் பார்ப்பேனேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்முடைய இணையம் வழியாக அந்த “YUPPTV” காரங்க, சன்,ஜெயா,விஜய்,ராஜ்,மக்கள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குறாங்க. இதுல ஒரு சிறப்பு அம்சமே, 10 நாள் நிகழ்ச்சிகள் வரை பார்க்க முடியும். அன்றைய நிகழ்ச்சிகளை அன்றைக்கே பார்க்கணும்னு அவசியம் இல்லை. நாங்க முத நாள் நிகழ்ச்சியை மறு நாள் தான் பார்ப்போம். ஓவியாவுக்கும், இனியாவுக்கும் அந்த மகாபாரத நிகழ்சி ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு. ஆனா, அவுங்களுக்கு, நிகழ்ச்சியில பேசுற தமிழ் புரியாது. ஆதனால தினமும் இரவு, அன்றைக்கு வந்த நிகழ்ச்சியை நான் அவுங்க அளவிற்கு கீழே இறங்கி புரியிர மாதிரி சொல்லுவேன். இதனால எனக்கு புதுசு புதுசா கதை சொல்ற வேலை இல்லாம போயிடுச்சு.

இதை பார்க்க ஆரம்பிச்சதிலிருந்து, வேற ஏதாவது ஒரு படத்துல “வாழ்க”ன்னு வந்தா போதும், உடனே இனியா, மகாபாரத்துல சொல்லுவாங்கன்னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுவும் கிருஷ்ணன் வருவதற்கு முன்பு, இசை ஒன்று வரும். அது வந்தவுடனே, இனியா கிருஷ்ணர் வரப்போராருன்னு ரன்னிங் காமென்டிரி கொடுத்துடுவாங்க. அதுல வர்ற கதாப்பத்திரங்கள் பேர் எல்லாம் ரெண்டு பேருக்கும் அத்துப்படி. அவுங்களை பொருத்தவரைக்கும் கௌரவர்கள் “BAD BOYS”, பாண்டவர்கள் “GOOD BOYS”. இதுல அவுங்களுக்கு பெரிய சந்தேகம் கர்ணன் “good boyயா, bad boyயான்னு”. அப்புறம் கர்ணன் கதாபாத்திரத்தை புரிய வச்சோம். பாப்பா எல்லாம் அம்மா வயிற்றிலுருந்து வராம எப்படி சாமி கொடுக்கிறாருன்னு பெரிய சந்தேகம். இப்படி அவுங்களுக்கு நிறைய சந்தேகம் தினமும் வரும். அதையெல்லாம் அவுங்க அளவிற்கு இறங்கிப் போய் புரிய வைப்போம். அப்புறம் பீமன் சாப்பிடுறதைப் பார்த்தா அவுங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு வரும். ரெண்டு,மூணு வாரத்துக்கு முன்னாடி, திரௌபதி, யாகத்தீயிலிருந்து, வந்ததைப் பார்த்த ஓவியா, எப்படி அப்படி வர முடியும், அவுங்களுக்கு சுடாதான்னு ஏகப்பட்ட கேள்விகள். இதுல இனியா, திரௌபதியை பார்த்து, அழகா இருக்காங்கம்மான்னு கமெண்ட். லீவு நாள்ல ஒரு நாள் காலையில மகாபாரதத்தை பார்த்துட்டு, ரெண்டு பேரும், எங்களுக்கு பாவாடை சட்டை தான் வேணும்னு அடம்பிடிச்சு, அப்புறம் பாவாடை சட்டை போட்டு, அவுங்களை மாதிரி செயின், நெத்திச்சூடி எல்லாம் போடணும்னு சொல்லி, அதெல்லாம் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறதை பாருங்க.



எல்லாத்தைவிட ஒரு ஹைலைட்டான விஷயமே, ஓவியா எங்களிடம் ஒரு கேள்வியை கேட்டது தான். இனியா என்னைய அக்கான்னு கூப்பிடுறா, அது மாதிரி நானும் ஒருத்தவங்களை அக்கான்னு கூப்பிடணும், அதுவும் ஒரு பாப்பா உங்க வயித்துக்குள்ளேருந்து வந்து உடனே என்னைய விட அது பெருசாயிடணும்னு” சொன்னாங்க. நாங்க பாப்பா உடனே எப்படி, உங்களை விட பெருசா ஆவாங்கன்னு கேட்டோம், அதுக்கு அவுங்களோட பதில், “மகாபாரதத்துல பீமன் அண்ணா ஒரு பாப்பாவை தூக்கி சாமிக்கிட்ட வைப்பாங்க, அந்த பாப்பா உடனே பெருசா ஆயிட்டாங்க, அது மாதிரி தான் நான் கேக்கிறதுன்னு” சொன்னாங்க. அப்புறம் அவுங்களுக்கு அதை ஒரு மாதிரி புரிய வச்சோம்.

விஜய் டிவியில வர்ற மகாபாரதம் எந்த அளவிக்கு உண்மைன்னு தெரியலை,  அந்த நிகழ்ச்சியினால சின்ன குழந்தைகளுக்கு நம்மளோட இதிகாசம் தெரியவருது,     அதோட நிறைய நல்ல கருத்துக்களையும் நம்மலாள அவுங்களுக்கு சொல்ல முடியுது.


சனி, 15 பிப்ரவரி, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா


அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம்  ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.




சும்மாவே, அவருக்கு ஆண்களை பிடிக்காது. தன் வயதையொட்டிய ஆண் குழந்தைகளிடம் சட்டென்று பழக மாட்டார். அப்படி இருக்கிறவரிடம் நான் சேக்கிழார் விழா நிகழ்ச்சியன்று தான், நீ வேட்டி கட்டிக்கணும்னு சொல்லி, ஒரு பெரிய வெள்ளை துண்டை அவருக்கு வேட்டியாக, கட்டிவிட்டோம். அதைக் கட்டிவிட்டவுடன் அவருக்கு ஒரே அழுகை வர ஆரம்பித்து விட்டது. நான் நடிக்க மாட்டேன். எனக்கு பிடிக்காத டிரஸ் போட்டுவிட்டீங்கன்னு ஒரே அழுகை. இதுல வீட்டு அம்மணி வேற ஓரேடியா விபூதியை அவுங்க கழுத்துல பூசிட்டாங்க. அதுவும்  அவுங்களுக்கு தொண்டையை உறுத்த ஆரம்பிச்சிருக்கு. எனக்கோ ரொம்ப பயாமகி விட்டது. என்னடாது, ஓவியா நடிக்கலைன்னா வேற என்ன பண்றதுன்னு ஒரே யோசனை. நான், அம்மணி அப்புறம் என்னோட மாமியார் எல்லோரும் ஓவியாவை சமாதானம் செஞ்சு எப்படியோ நடிக்க வச்சுட்டோம். மேடைல கூட முகத்தை தூக்கிவச்சுக்கிட்டே தான் நடிச்சாங்க. ஓவியாவோட இந்த அழுகையில, என்னுடைய மாமியார் தான் ரொம்ப பயந்து போய், முருகா, உனக்கு உண்டியல்ல காசு போடுறேன், எப்படியாவது ஓவியா ஒழுங்கா நடிச்சிடணும்னு முருகனுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்தாங்க.





மேலாயுள்ள படத்தில அப்பூதி அடிகளின் மகன் இலையை அறுக்கும்போது பாம்பு கடித்து இறந்து விடுவார். அவரை கோவிலில் படுக்க வைத்து திருநாவுக்கரசர் பதிகம் பாடி, அவரை உயிருடன் எழச் செய்வார். நான் சொல்லிக்கொடுத்தப்படி, தர்ஷன் ஒரு முறை பதிகம் படித்தவுடன், ஓவியா எந்திரிப்பார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் போது, அவர் எந்திரிக்கவில்லை. தர்ஷனுக்கு என்னப்பண்றதுன்னு தெரியலை. நான் பிண்ணாடியிருந்து, தர்ஷனை இன்னொரு முறை அந்த பதிகத்தை பாடச் சொன்னேன். அவரும் பாடினார். நல்லவேளையாக இரண்டாவது தடவை பாட்டு முடிந்தவுடனே, ஓவியாவும் எந்திரிச்சு, என் வயிற்றில் பாலை வார்த்தார். 

அந்த நாடகம் முடிஞ்சவுடனே, ஓவியா, இனிமே எனக்கு பாய் டிரஸ் போட்டீங்கன்னா நான் நாடகத்துலேயே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இவுங்கக்கிட்டேயிருந்து நான் கத்துக்கிட்ட ஒரு பாடம் என்னன்னா, இந்த மாதிரி குழந்தைகள் நாடகங்களில், குழந்தைகள் கிட்ட முதல்ல அவுங்க கிட்ட இந்த கதாப்பத்திரத்தில நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டுட்டு தான் அவுங்களை நடிக்க வைக்கவே ஆரம்பிக்கிறேன்.   


சனி, 8 பிப்ரவரி, 2014

ஓவியாவின் இரண்டாவது கவிதை மனனப்போட்டி




ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கம் (ASoGTAustralian Society of Graduate Tamils) என்னும் கழகத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் ஓவியா சென்ற வருடம் பங்கேற்று, கவிதை மனனத்தை செய்தது தான் கீழே உள்ள காணொளி.





நான் ஓவியா, இனியாவிற்காக ஒரு வலைப்பூவை ஆரம்பித்து, நெடு நாட்களாக ஒன்றையும் எழுதாமல் இப்பொழுதாவது தான் எழுத ஆரம்பித்துள்ளேன். இனி அடிக்கடி அவர்களின் ஆக்கங்களையும்அவர்களைப் பற்றைய செய்திகளையும் இந்த வலைப்பூவில் காணலாம்.