செவ்வாய், 8 ஜூலை, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்





எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நானும் இரண்டு நாட்கள் முன்பு, சரி நாம கடைக்கு போகலாம், நீங்க போய் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்யுங்கள் என்று சொன்னேன். உடனே ஓவியா, அப்பா, ஒரு டாலர் கொடுங்கள்” என்று கேட்டார். நானும் கடைக்கு போனவுடனே கொடுக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் மணிப்பர்ஸ் இருக்கிறது, அதில் வைத்துக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் ஒரு டாலரை கொடுத்தவுடன், அந்த மணிப்பர்ஸை திறந்து அதில் போட்டுக்கொண்டார்.





இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இனியா, எனக்கும் காசு கொடுங்கள் என்று கேட்டார். நல்லவேளை, அதே மாதிரி மணிப்பர்ஸ் வேண்டும் என்று கேட்கவில்லை. இனியவ்வின் பாக்கெட்டில் ஒரு டாலரை போட்டுவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரில் (இங்கில்பர்ன்) ஷாப்பிங்க்கு போனோம். அங்கே ஒரு கடையை மூடுவதால்,closing down sale” என்று போட்டு வெளியில் எல்லாம் ஒரு டாலர், இரண்டு டாலர் வெளியில் வைத்திருந்தார்கள்.







ஓவியாவிடம், இதிலில் ஒரு டாலருக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் கையில் மணிபர்ஸை வைத்துக்கொண்டு, அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு வந்தார். ஒரு டாலருக்கு அதிகமாக உள்ள பொருட்கள காமிச்சு, இது எத்தனை டாலர் என்று கேட்க, நானும் அந்த பொருட்களுக்கு கீழே ஒட்டியுள்ள விலைப்பட்டியலை காமித்து சொன்னவுடன், ஒரு டாலர் உள்ள பொருட்களிடம் சென்று பார்த்து, ஒரு பென்சில் கேஸ், இரண்டு பென்சில், மூன்று குட்டி அழிப்பான்கள் (ரப்பர்) எல்லாம் செட்டாக ஒரு டாலர் என்று போட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டார். மீண்டும் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கும்போது, ஐம்பது சென்ட்க்கு (50 cents) சில பொருட்கள் இருந்தன. அவருக்கு இம்பது சென்ட் ஒரு டாலரை விட பெருசா என்று தெரியவில்லை. அவருக்கு சென்டை (cents), புரிய வைத்தவுடன், அதிலிருந்து ஒரு water spray பொருளையும் எடுத்துக்கொண்டு, எனக்கு இந்த இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை, நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்.


நானும், வாங்குவது நீங்கள் தான், அதனால் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னேன். சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்து விட்டு, அந்த பென்சில் செட்டை வைத்துவிட்டு, இந்த water sprayயை எடுத்துக்கொண்டார். எதனால் இதை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, இதை வைத்து நான் செடிக்கு தண்ணி ஊற்றுவேன். மேலும் இது 50 சென்ட் தான் என்று கூறினார்.



இதில் இனியா, ஆரம்பத்துலேயே அந்த water spray கையில் எடுத்து வைத்துக்கொண்டார். அவருக்கு அக்கா மாதிரி ஒரு குழப்பமும் வரவில்லை.






சரி, இரண்டு பேரும் அந்த பொருளை எடுத்துக்கொண்டு கடைக்குள் போய் பில் போட்டு வாங்கிக்கிட்டு வாங்க என்று சொன்னேன். இருவரும் உள்ளே சென்று அந்த பொருளை காமித்து, ஒரு டாலரை இருவரும் கொடுத்தார்கள். அந்த பில் போடுகிற பெண்மணி, இருவரிடமும், “உங்களுக்கு 50 சென்ட் திருப்பி வேண்டுமா” என்று கேட்டார். ஓவியா ஆமாம் என்று கூறினார். இனியாவுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, தாராள பிரபுவாக எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்புறம் 50 செண்டை அவர்கள் திருப்பிக்கொடுத்தவுடன், ஓவியா அதை மணிபர்ஸில் வைத்துக்கொண்டார். இனியா, அதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஓவியாவிற்கு மகிழ்ச்சி என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு வீட்டுக்கு வந்தவுடன், அந்த 50 செண்டை என்னிடம் கொடுத்து, எனக்கு வேறு ஏதாவது வாங்கும்போது இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்.




ஆஹா, பரவாயில்லை, காசின் மதிப்பு தெரிகிறதே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது.





ஞாயிறு, 15 ஜூன், 2014

இனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு????



எங்களின் இரண்டாவது மகாரணி இனியாவிற்கு இன்று தான் மூன்று வயது முடிவடைந்து நான்கு வயது ஆரம்பமாகிறது. ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. வீடு முழுக்க உள்ள சுவற்றில் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார் (கையில் பேனா கிடைத்தால் அது எழுதுகிறதா என்று சோதனை செய்வதே சுவற்றில் தான்). போதாக்குறைக்கு சோபாவிலும் அவருடைய கைவண்ணம் தெரியும். உங்களுக்கு எல்லாம் தண்ணீர் குடித்தால் வாந்தி வருமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருக்கு தண்ணீர் குடித்தால் வாந்தி வருமாம். அதைத்தான் இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.  தண்ணி குடித்தால் வாந்தி வரும் சரி, இன்றைக்கு பிறந்த நாளாக இருக்கிறதே, தலைக்கு குளிப்பாட்டுவோம் என்று தலைக்கு தண்ணீர் ஊற்றப்போனால், தலை குளிக்க வேணாம், சளி பிடிக்கும்னு” வேற சொல்றாங்க.

ஒரு நாள், ஓவியா சோபாவிற்கு கீழே உட்கார்ந்து என்னமோ செய்து கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது இவுங்க சோபாவில் உட்கார்ந்து, காலை எடுத்து ஓவியாவின் தலை மேல் வைத்து, ஓவியாவை டிஸ்டர்ப் செஞ்சிக்கிட்டு இருந்திருக்காங்க. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அம்மணிக்கு சரியான கோபம். உடனே, இனியாவிடம், உன் காலை எதுக்கு அக்கா தலை மேல வைக்கிற, பேசாம உன் தலை மேல் வச்சுக்கோன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கு இனியாவோட பதில் எப்படி இருந்துச்சுன்னா...


 (சோபாவில உள்ள கிறுக்கல்கள் எல்லாம் அவுங்களோட கைவண்ணம்) 

பிறந்த நாள் அதுவுமா, அவுங்களைப் பற்றி குறையே சொல்லிக்கிட்டு இருந்தால் நல்லா இருக்காது, அதனால், அவுங்களோட இன்றைய பிறந்த நாள் எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்.

அவுங்க காலையில எந்திரிச்சவுடனே, ஓவியா அக்கா அவுங்களுக்காக ஒரு பேப்பர்ல வாழ்த்துச் செய்தி எழுதி அவுங்க கிட்ட கொடுத்தாங்க. 



சியாந்திரம் முருகன் கோவில்ல சேக்கிழார் விழா நிகழ்ச்சியில ஓவியாயும் முதல் முறையா இனியாவும் கலந்துக்கிற நாடகம் இருந்ததுனால, அப்பப் போய் சாமி கும்பிட்டுக்காலம்னு காலையில கோயிலுக்கு போகலை.



மதியம் கேக் வாங்கிவந்து அதை இனியா கட் பண்ணி எல்லோருக்கும் ஊட்டி விட்டாங்க.









சியாந்திரம் நான் எழுதிய “சைவ நீதி” என்னும் நாடகத்தை, எங்கள் தமிழ் பள்ளி மாணவர்கள் சிட்னி முருகன் கோவிலில், சேக்கிழார் விழா நிகழ்ச்சியில் மேடை ஏற்றினார்கள். அதில் இனியாவும் மேடையேறினார். எங்களுக்கு, அவருடைய பிறந்த நாள் அதுவுமாக கோவிலில் மேடை ஏறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு வசனம் எதுவும் இல்லை, ஆனால் எங்களின் உதவி இல்லாமல் அவர் மேடை ஏறியது தான் மிகுந்த ஆச்சிரியம். 

இப்படியாக அவரின் மூன்றாவது பிறந்த தினம் இனிதாக நிறைவடைந்தது.

அந்த நாடகத்தைப் பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன்.




செவ்வாய், 10 ஜூன், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)






இந்த பதிவுல ஓவியாவிற்கு, பள்ளியில் கிடைத்த வெகுமதிகளைப் பற்றி சொல்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும் நடக்கும் அசெம்ப்ளியைப் பற்றி முதல் பகுதியில சொல்லியிருப்பேன். மற்ற நாட்களில் பாலர் வகுப்புகளுக்கு தனியாக அசெம்ப்ளி நடக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை(வெள்ளிக்கிழமையில்) , பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலும், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலும் தனியாக ஒரு சின்ன ஹாலில் அசெம்ப்ளி நடக்கும். இந்த அசெம்ப்ளியானது காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து 12.30மணிக்கு முடிவடையும். இதிலும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். இதில் விருது வாங்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதனால் அந்த பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்கள் குழந்தை வாங்கும் விருதை கண்டுக்களிக்கலாம். இந்த அசெம்ப்ளியில்  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகுப்பு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை 5 நிமிடத்திற்கு வழங்குவார்கள். பிறகு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பார்கள். இதில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில்,ஓவியா “Reading Skills”க்காக ஒரு “MERIT AWARD” வாங்கினார்.  


இது போக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு “Being A Safe and Respectful Learner” என்ற ஒரு பச்சை அட்டையை வகுப்புகளில் வழங்குவார்கள். அவ்வாறு ஒரு மாணவன் 20 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால், அவனுக்கு ஒரு “Bronze Award” கிடைக்கும். 40 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Silver Award” கிடைக்கும். 60 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Gold Award” கிடைக்கும். 80 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Diamond Award” கிடைக்கும். இந்த விருதுகள் அனைத்தும் சான்றிதழ்கள். ஒரு வருடத்திற்குள் எவ்வளவு பச்சை அட்டைகளை வாங்குகிறோம் என்பதை பொறுத்து இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளும் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில் கொடுக்கப்படும். இந்த வருடத்திற்காக கொடுக்கப்படும் “Bronze Award” விருதினையும் ஓவியா பெற்றார்.


(காணொளி சற்று சரியாக வரவில்லை)





                    (நாங்கள் மகளிர் கூட்டணியாக்கும்)

ஒரு வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில், ஒவ்வொரு வகுப்பும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்து காட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சியை வேறொரு வகுப்பு செய்யப்போவதை, ஓவியாவின் வகுப்பிலிருந்து, ஓவியா அறிமுகம் செய்து வைக்கிறார்.





பாலர் வகுப்புகளில் இருந்தே,  குழந்தைகளுக்கு மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

ஓவியா வகுப்பில், கணக்கு பாடத்தில் முதலாவதாக வந்ததால், அவரின் ஆசிரியை அவருக்கு இந்த பேனாவை பரிசாக அளித்திருக்கிறார்.




அடுத்த பகுதியில், பள்ளிக்கூடத்தில் எந்த அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது என்பதையும், பச்சை அட்டை மாதிரி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு அட்டைகளும் வழங்கப்படுகிறது. அவைகள் எதற்காக வழங்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.







புதன், 28 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)




இந்த பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அதாவது வகுப்பறைக்குள் நடப்பதை ஓவியா ஞாபகம் வைத்து சொல்வதையும், வகுப்பில் அவர்கள் பயன்படுத்துகின்ற பயிற்சி தாள்களையும் வைத்து தான் நான் இங்கே எழுதுகிறேன்.

ஓவியா பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபொழுது, அவருக்கு A,B,C,D பாட்டாக சொல்ல மட்டும் தான் தெரியும். மற்றபடி அவருக்கு எழுத்துக்களையெல்லாம் பார்த்துச் சொல்லத் தெரியாது. அவருடைய பெயரை மட்டும் எழுதத் தெரியும். அதே மாதிரி எண்களில் ஒன்று முதல் பதினைந்து வரை மட்டும் தான் சொல்லத் தெரியும். நிறங்களை சொல்லத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் தெரியாது. ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து ஏறக்குறைய நான்கு மாதங்களில் அவருக்கு A,B,C,D எப்படி கேட்டாலும் தெரியும், மேலும் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். இரெழுத்து, மூன்றெழுத்து வார்த்தைகள் எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்கிறார். எண்களில் ஒன்று முதல் முன்னூறு வரை சொல்கிறார். ஒரு அடுக்கு (single digit) எண்களை கூட்டவும், கழிக்கவும் தெரிகிறது. எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். இத்தனைக்கும் நாங்கள் வீட்டில் தனியாக சொல்லிக்கொடுப்பது இல்லை. (வெறும் வீட்டுப்பாடங்கள் மட்டும் தான் சொல்லிக்கொடுக்கிறோம்).

ஓவியாவிடம் இன்றைக்கு என்ன படித்தீர்கள் என்று தினமும் கேட்கும்பொழுதுதான், இங்கு சொல்லிக்கொடுக்கும் முறையே வித்தியாசமானது என்று தெரிந்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் ஆங்கிலப் பாடம்,கொஞ்ச நேரம் கணிதப்பாடம், கொஞ்ச நேரம் ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடு செய்வது,கொஞ்ச நேரம் கதை படிப்பது (story reading) என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆங்கிலத்தை A – Apple, B – Bat என்று சொல்லிக்கொடுக்கமாட்டார்களாம். அதற்கு பதில் “போனிக்ஸ் (PHONICS) முறையில் தான் சொல்லிக்கொடுப்பார்களாம். அதாவது வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஏற்படுகிற ஒலியை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அடிக்கடி ஓவியா, ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி,அதனுடைய முதல் வார்த்தை இந்த எழுத்தில் ஆரம்பிக்கிறது என்று சொல்லுவார். அதே மாதிரி, காரில் செல்லும்போது, சாலையில் தெரியும் பெரிய எழுத்துக்களை எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். நாம் ஏதாவது ஒரு வார்த்தைக்கு எழுத்துக்கோர்வையை (spelling) கேட்டால், உடனே அந்த வார்த்தையை phonic முறையில் உச்சரித்து பார்த்து, எழுத்துக்கோர்வையை சொல்ல முயற்சிக்கிறார். வகுப்புகளில் worksheets போன்றவற்றை பயன்படுத்தி எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த worksheets சிலவற்றை கீழே பார்க்கலாம்.





இதே மாதிரி worksheetsசை பயன்படுத்தித் தான் எண்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.











அந்த worksheetsகளில் எல்லாம் அவர்களை கலர் பண்ணச் சொல்லி, வகுப்பை போர் அடிக்காமல் சுவாரசியமாக கொண்டு செல்கிறார்கள். நோட்டுக்களையே அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. எல்லாம் இந்த மாதிரி worksheets தான். இதையெல்லாம் ஒரு ஃபைலில் போட்டு வைக்கச் சொல்கிறார்கள். 


(இப்படி தான் பேட்டர்ன் (pattern) கான்செப்டை கற்றுக்கொடுக்கிறார்கள்) 

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் ஓவியா என்னிடம், “அப்பா உங்களுக்கு 3 + 4 = என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னவுடன், இது கூட உங்களுக்கு தெரியலையா என்று சொல்லி, இரண்டு கைகளையும் பயன்படுத்தி 7 என்று கூறி, இது மாதிரி தான் எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொன்னார்கள்”. அதே மாதிரி இங்கு கழித்தலை, மாணவர்களுக்கு “from 5 take 3 = 2 “ என்று தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இவை போக வாரவாரம் புதன்கிழமை நூலகத்திலிருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து கொண்டு வரலாம். அவரவருக்கு பிடித்தமான புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். அந்த புத்தகத்தை தினமும் அம்மணி ஒரு முறை படித்துக்காட்டுவார்கள். பள்ளியிலேயே நூலகப் புத்தகப்பை என்று ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.





(இந்த வார நூலகப் புத்தகம்)



(ஒவ்வொரு பக்கங்களிலும் இரண்டு அல்லது மூன்று வரிகள் தான் இருக்கும்)

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று வகுப்புகளில் சில சைட் (sight words) வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு “it “, “up”, “sit” போன்ற நான்கைந்து வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து அந்த வார்த்தைகளையே அட்டைகளில் பிரிண்ட் எடுத்து வீட்டுப்பாடமாக கொடுக்கிறார்கள். வீட்டுபாடத்தையும் எவ்வாறு விளையாட்டாக செய்யச் சொல்கிறார்கள் என்பது பற்றி மற்றொரு பதிவில் சொல்லுகிறேன்.


வெள்ளி, 16 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)






போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

நம் ஊரில் வகுப்புகளின் பிரிவுகளுக்கு – A,B,C என்று சொல்லுவார்கள். அதாவது 1A, 1B etc.. (இப்பொழுதும் அதே நடைமுறை தான் என்று நினைக்கிறேன்). இங்கு வகுப்பு ஆசிரியர்களின் குடும்ப பெயரின் முதல் எழுத்தைத்தான் அந்தந்த வகுப்புகளின் பிரிவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஓவியாவின் வகுப்பு KT. அதாவது Kinder, பிறகு அந்த வகுப்பாசிரியரின் குடும்ப பெயரின் முதல் எழுத்து.  
  



நான் முதலில் அவருடைய வகுப்பு அறையின் கதவைத்தான் புகைப்படம் எடுத்தேன். வகுப்பிற்குள் படம் எடுக்க அனுமதிப்பாளர்களா என்று ஒரு சிறிய சந்தேகம். சரி, அவர்களுடைய வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுப் பார்க்கலாம், அனுமதி தந்தால், புகைப்படம் எடுக்கலாம், இல்லையென்றால் இந்த ஒரு புகைப்படமே போதும் என்று நினைத்து, நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்த நாளின் மாலையில் ஓவியாவின் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வகுப்பு தான் கொஞ்சம் அலங்கோலமாக இருக்கும், அது தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி அனுமதியளித்தார்கள். நான் உடனே வகுப்பிற்குள் சென்று, ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அப்போது அவர்களே, ஓவியாவை கூப்பிட்டு உன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துக்கொள், உன் தந்தை உன்னை படம் எடுப்பார் என்று கூறி ஓவியாவை உள்ளே அனுப்பி, இருக்கையில் அமரச் செய்தார்.  நான் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 



இது தான் அவர்களுடைய வகுப்பு. நாம் துணியை காயப்போடுவது போல், இங்கு மாணவர்களின் படைப்புகளை கயிற்றில் தொங்க விட்டிருக்கிறார்கள். 



ஸ்மார்ட் போர்டு (SMART BOARD )



வகுப்பின் பின் பகுதி. இந்த வகுப்பில் படிக்கும் எல்லா மானவர்களின் புகைப்படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.  இதில் முதல் படம் தான் ஓவியாவின் படம். நான் இதை புகைப்படம் எடுக்கும்போது, ஓவியா அன்றைக்கு ஏதோ craft செய்திருக்கிறார்கள், அதனை நன்றாக ஒட்டுவதற்காக cellotape எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 



இது ஓவியாவின் ஒரு படைப்பு



இது தான் அவருடைய இருக்கையாம்!!!



ஒவ்வொருவருடைய மேசையின் மீது அவர்களுடைய பெயரை ஒட்டி வைத்திருக்கிறார்கள். 

சரி, அவருடைய வகுப்பைப் பார்த்தாச்சு, இனி வகுப்பில் அவருக்கு எவ்வாறு கல்வியை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

பின் குறிப்பு: வகுப்பில் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை ஓவியா சொல்வதை வைத்து தான் நான் எழுதுகிறேன். 

ஞாயிறு, 11 மே, 2014

ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்






இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். இனியா வாரத்திற்கு இரு நாட்கள் டே கேர் செல்கிறார்கள். அன்னையர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்தபடியால், அந்த டே கேரில் சென்ற வாரமே அன்னையர் தினத்தை கொண்டாடி விட்டார்கள். அன்றைக்கு அங்கு வரும் அனைத்து குழந்தைகளின் அன்னையர்களையும் அழைத்து கேக் எல்லாம் வெட்டி பிரமாதப்படுத்திவிட்டார்கள். போதாக்குறைக்கு, குழந்தைகளுக்கு அவர்களே அட்டையில் ஒரு கைவினைப் பொருளை செய்து அதில் அன்னையர்களை வாழ்த்தி எழுதியிருக்கிறார்கள்.  அந்த கைவினைப் பொருளை குழந்தைகளின் கையில் கொடுத்து, அதை அவர்கள் தங்கள் அன்னையிடம் கட்டிப்பிடித்து “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதில் இனியா தன் தாய்க்கு கொடுத்த அன்பு பரிசு தான் கீழே உள்ள படம்.





ஒரு அட்டையில், சிறிய கைப் பை (handbag) மாதிரி செய்து, அதில் உள்ளே அன்னையரை போற்றக்கூடிய வசனங்களை எழுதி கீழே இனியாவின் பெயரைப் போட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் தன் தாயிடம் “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.         

இது டே கேர் நிலையத்தில் நடந்த விஷயம். ஓவியாவின் பள்ளிக்கூடத்தில், அன்னையர் தினத்தில், அன்னைக்கு பரிசு கொடுப்பதற்காகவே ஒரு ஸ்டால் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் $4, மற்றும் $6க்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வைத்து, குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். ஓவியாவும், நீங்கள் வாரா வாரம் வங்கியில் போடுவதற்காக எனக்கு கொடுக்கும் பணத்திலிருந்து நான்கு டாலர்களை எடுத்துக் கொடுங்கள், நான் உங்களுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். நாங்களும் நான்கு டாலரை கொடுத்தோம். ஓவியாவும் அந்த பள்ளிக்கூடத்திற்குள் இருக்கும் கடையில் என்ன வாங்குவது என்று ரொம்ப யோசித்து, இறுதியாக வாங்கியது தான் கீழே உள்ளே படம்.



இதுவும் பார்க்க ஒரு குட்டி கைப் பை (handbag) மாதிரி தான் தெரியும். ஆனால் உள்ளே பார்த்தால்,







ஒரு பக்கத்தில், சில்வரில் ஒரு சின்ன கத்தி, கத்திரிக்கோல், நெகம் வெட்டும் கருவி மற்றும் ஒரு போர்ஸிப் போன்ற ஒரு கருவி (இதற்கு எனக்கு சரியான பேர் தெரிய வில்லை). மற்றொரு பக்கத்தில் ஒரு சின்ன அட்டையை மட்டும் வைத்திருக்கிறார்கள். அதில் ஓவியா,HAPPY MOTHERS DAY”LOVE FROM OVIYA” என்றும், இவ்விரு வாக்கியங்களை சுற்றி, இருதய படங்களை வரைந்து, தன் அன்னைக்கு பரிசு அளித்திருக்கிறார்.


இந்த இரண்டு பரிசுகளையும் பெற்றுக்கொண்ட என் வீட்டு அம்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம், "நீங்கள் மகளிர் தினத்துக்கு எனக்கு ஒரு பரிசையும் கொடுக்கலை, ஆனால் என் செல்வங்கள் எனக்கு அன்னையர் தினத்துக்கு மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தாவது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு பாடம் எடுத்து விட்டார்கள்.  (நான் கணவனாக அமைந்ததே பெரிய பரிசு என்று அம்மணிக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!!!)

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1



(முதல் நாள் பள்ளிக்கூட வளாகத்தில்)



(வகுப்பறையை நோக்கி செல்லுதல்)



(வகுப்பறைக்குள் செல்லுதல்)




(வகுப்பறையில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பையை மாட்டுதல். பைக்குள் புத்தகங்கள் எல்லாம் இருக்காது. அவர்களின் லஞ்ச் பாக்ஸ், ஜாக்கெட் போன்றவைகள் தான் இருக்கும்)



இந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு  அவருக்கு  எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).


ஓவியா பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து முதல்  பருவம்(TERM) முடிந்து இப்போது இரண்டு வார விடுமுறையில் இருக்கிறார். இங்குள்ள பள்ளிக்கூடங்கள் எல்லாம் சனவரி மாத கடைசியில் ஆரம்பித்து டிசம்பர் மாதம் பதினைந்து தேதிகளில் முடிவு பெரும்.  ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பருவமாக (TERM) சொல்லப்படுகிறது. முதல் மூன்று பருவங்கள் முடிவடையும்போது, இரண்டு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. கடைசி பருவத்தில் தான் ஆறு வார விடுமுறை அளிக்கப்படுகிறது.  காலை 9  மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது. இதில் 11 மணியிலிருந்து 11.30  மணிக்கு இடைவேளை. பிறகு மதிய உணவிற்கான இடைவேளை 1மணியிலிருந்து 1.40 மணி வரை. இதில் முதல் பத்து நிமிடம் சாப்பிடுவதற்கான நேரம். அடுத்து வரும் முப்பது நிமிடங்களும் விளையாட்டு நேரம். பத்து நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, 40 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஆனால் எல்லா குழந்தைகளும் முதல் 10 நிமிடத்திற்குள் என்ன சாப்பிடுகிறார்களோ,அது தான் அவர்களின் மதிய உணவு. பிறகு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பள்ளியிலேயே உணவகமும் இருக்கிறது. அதற்கு காலையிலேயே ஆர்டர் செய்து விடவேண்டும். "பள்ளி வங்கி"(School Banking) ஒன்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் "Common Wealth Bank" என்ற வங்கி நடத்துகிறது. இதில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணத்தை, தங்களின் பெயரிலியே அந்த வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம். 


ஒவ்வொரு திங்கட் கிழமை காலையிலும் எல்லா வகுப்பு மாணவ மாணவியரும் ஒருங்கிணைத்து அசெம்ப்ளி (assembly) நடக்கும். அப்போது கொடியேற்றம் நடக்கும். இந்த அசெம்ப்ளியையும், கொடியேற்றத்தையும் பள்ளித் தலைவர்களாக (School Leader) விளங்கும் மாணவ மாணவியர்களே நடத்துவார்கள்.அப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தையும் , பள்ளிக்கான பாடலையும்  படுவார்கள். 




ஓவியா இப்போது பாலர் பள்ளியில் (kinder garden) படிக்கிறார்.  ஐந்து வயதில் பாலர் கல்வி (kinder garden), ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு என்று படிக்க ஆரம்பிப்பார்கள். தொடக்க பள்ளியானது (Primary School ) பாலர் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு (Kinder to Year6) வரை உள்ள பள்ளிக்கூடம். உயர் நிலைப் பள்ளியானது (High School) ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம். 


இங்குள்ள தொடக்க கல்வி முறை சற்றே வித்தியாசமாக இருக்கிறது. அதாவதுபாலர் வகுப்பிற்கு, ஆங்கிலம் மற்றும் கணிதம் தான் பாடங்கள். அந்த இரண்டு பாடங்களையும் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.